இனி இந்த ஒரு டிக்கெட் போதும்.. பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. தமிழ்நாடு அரசு அசத்தல் முடிவு

 

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் இந்த மூன்றிலும் பயணிக்க மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்தனர். இவ்வாறு பொதுமக்கள் தனித்தனி பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 2 வது வாரம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.

எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறைதான் உள்ளது. ரயிலகளில் யூடிஎஸ் செயலி முறையிலும், நேரடியாகவும் டிக்கெட் பெறலாம். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய, பயண அட்டை, செயலி மற்றும் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி உள்ளது. பொதுமக்கள் ஒரே பயணத்தில் இந்த மூன்றிலும் பயணம் செய்ய வேண்டும் என்றால் தனித் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காண ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அமல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு தனியாக செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த முறையின் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட் மூலம் நீங்கள் தேர்வு செய்த பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்யலாம்.