காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்து.. ஒருவர் பலி.. சங்ககிரியில் ஷாக் சம்பவம்!

 

சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி சரக காவல் நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா ஆய்வு நடத்த உள்ளதையொட்டி காவல் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் காவல் நிலையத்தின் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டி தூய்மைப் பணியாளர்கள் எரியவிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் மேற்கூரையில் பட்டு தகரம் தெறித்து விழுந்துள்ளது. தகரம், தூய்மைப் பணியாளர் நியமத்துல்லா (47) என்பவரின் தொடையில் பலமாக கிழித்து ரத்தம் கொட்டியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

இந்த நிலையில் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பரத் என்பவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

காவல் நிலையத்தில் வெடித்துச் சிதறிய மர்ம பொருள் எப்படி அங்கு வந்தது, போலீசாரால் கைப்பற்றப்பட்ட பொருளா, அல்லது யாரேனும் திட்டமிட்டு அங்கு கொண்டு வந்து வைத்தார்களா? குப்பையில் கிடந்தது பட்டாசா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.