பள்ளிக்குள் நுழைந்து மாணவரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

 

திருவள்ளூரில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மணவாளநகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ப்ளஸ்-1 மாணவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், மாணவரின் கை மற்றும் தலையில் வெட்டியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் ஜெனிஃபர் தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ஜெனிஃபரையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவனை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினர்? முன் விரோதம் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.