தென்காசியில் பரவும் மர்ம காய்ச்சல்.. 6 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!!

 

ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர பகுதியான சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது இளைய மகள் செண்பக மாலினி (6). இவர், தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில் மீண்டும் சோர்வாக காணப்பட்ட செண்பக மாலினிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து சிறுமியை இன்று ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் சிறுமி இறந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுமி உடல் ஆலங்குளம் போலீசாரால் பிரேத பரிசோதனைக்காக நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்பே சிறுமி இறந்தது எப்படி? என்ன காய்ச்சல்? என்ற விபரம் தெரிய வரும். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.