மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி பலி.. தொடரும் வெள்ளியங்கிரி விபரீதம்

 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (60). இவர், தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவரும், அவரது அக்கம் பக்கத்தில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து வேன் மூலம் கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவைக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து ரகுராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறிய 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.