2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை.. குடும்பத் தகராறில் விபரீதம்!

 

சேலம் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (30). ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் கடந்த 15 நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன், மனைவி இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்படவே, கோகுல் வழக்கம் போல் இன்று காலை தனது பணிக்கு சென்றுவிட்டார்.

மன உளைச்சலில் வீட்டில் இருந்து வந்த சுகமதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகமதி, குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.