10 மாத குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை.. கணவரைப் பிரிந்த சோகத்தில் விபரீத முடிவு!

 

கணவரைப் பிரிந்த சோகத்தில் தனது 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (47). இவரது கணவர் தெய்வேந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அதே பகுதியில் ஒரு பட்டாசு ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகள் சுபலட்சுமி (25). சுபலட்சுமிக்கும், மகேஷ்குமாருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், மகேஷ்குமாருக்கும், சுபலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்படி, சுபலட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து தனது குழந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 13) வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாண்டியம்மாள், சுபலட்சுமி மற்றும் அவரது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின்னர், சந்தேகமடைந்த பாண்டியம்மாள் வீட்டுக்கு பின்புறம் உள்ள தகர செட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு சுபலட்சுமி மற்றும் அவரது 10 மாத குழந்தை தூங்கில் தொங்கியபடி கிடந்தனர்.  இதைக் கண்டு, செய்வதறியாது நின்ற பாண்டியம்மாள், இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் சுபலட்சுமி மற்றும் அவரது குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், தாய் மற்றும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக மனவருத்தம் அடைந்த சுபலட்சுமி, தனது 10 மாத குழந்தையை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.