கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு மகன்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

 

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்தில் சிக்கினார்.

தமிழ்நாட்டின் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவர் திமுக தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் எ.வ.வே. கம்பன். இவர் திமுக மருத்துவ அணியில் நிர்வாகியாக உள்ளார்.

இந்நிலையில், எ.வ.வே. கம்பன் நேற்று திருவண்ணாமலையின் ஏந்தல் பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கம்பன் பயணித்த கார் மற்றொரு கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் கம்பன், கார் டிரைவர், உதவியாளர், மற்றொரு காரில் பயணித்த இருவர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் விபத்தில் சிக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.