பெரம்பூரில் திருமணமான புதுப்பெண் 20 நாளில் மர்ம மரணம்.. ஆர்டிஓ விசாரணை!

 

பெரம்பூரில் திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா (27). இவர், பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களாக, பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனியை சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டில் வேலை செய்த இந்துஜா மயங்கி விழுந்துள்ளார். ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இந்துஜாவின் உடலை சோதனை செய்தனர்.

அதில், உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் திருமணம் ஆகி 20 நாட்கள் மட்டுமே ஆவதால் வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.