தமிழ் முறைப்படி திருமணம்.. யோகா டீச்சரை மணந்து தஞ்சை மருமகளான ரஷ்ய பெண்!!

 

பட்டுக்கோட்டை சேர்ந்த இளைஞர் ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மணியன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இந்த தம்பதியரின் மகன் பிரபாகரன். இவர் ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளாக யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி - மயூரா இவர்களின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்தார். 

இதுகுறித்து மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதத்தைப் பெற்றார் பிரபாகரன். இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் ரஷ்ய பெண்ணை கரம் பிடித்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில் இவர்கள் இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர். 

இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், நான் யோகா டீச்சர் ஆக ரஷ்யாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய யோகா மாணவியாக அல்பினா இருந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனை அடுத்து எங்களது பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று இன்று அவர்கள் முன்னிலையே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்றார்.

இது குறித்து பேசிய அல்பினா, ரஷ்யா கலாச்சாரத்தை விட தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள  மக்கள் மற்றும் இவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.