வெள்ள நீரில் மிதந்த ஆண் சடலம்.. நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் கடும் அதிர்ச்சி!

 

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் வெள்ள நீரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்தது. 3 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில் ஆண் சடலம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பு பேருந்து நிலையத்தில் முதியவரின் உடல் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி, உயிரிழந்தது யார் என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.