டிப்பர் லாரி மோதி கணவன் - மனைவி பலி.. திருமணத்திற்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்!

 

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் திருமண விழாவிற்கு சென்ற தம்பதி, லாரி மோதியதில் சம்பவ இடத்தலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் கோவிந்தராஜ் (24). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சேலம் மாவட்டம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் ரேணுகாவுக்கும் (21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி ரேணுகாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், பெரம்பலூர் - துறையூர் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்து இருக்கிறார்கள்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கோவிந்தராஜும், ரேணுகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், கணவன் மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். விபத்தில் கணவன் - மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.