காதல் தோல்வி.. டாக்டர் விஷம் குடித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்!

 

திருச்சியில் காதல் தோல்வியால் டாக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கௌதம் (26). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அண்மையில் திடீரென வயிற்று வலி எனக்கூறி அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி கௌதமுக்கு தீடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கௌதம் பயின்ற காலத்தில், அவருடன் பயின்ற ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தனது காதலில் தோல்வி ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.