கல்லூரி வளாகத்தில் புகுந்த கட்டுவிரியன்... பதறி ஓடிய மாணவிகள்... மருத்துவமனையில் மாணவி அனுமதி!!

 

திண்டுக்கல்லில் கல்லூரி வளாகத்தில் மாணவியை கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். நேற்று திங்கட்கிழமை என்பதால் கல்லூரியின் அசம்பிளி ஹாலில் அனைத்து மாணவிகளும் ஒன்று கூடினர்.

கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்துக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது வேகமாக சென்ற பாம்பு மீனாவை கடித்தது.

இதனால் அவர் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் கல்லூரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்று, இறந்த பாம்புடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மாணவிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.