ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? காத்திருக்கும் குட் நியூஸ்!

 

ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ள நிலையில் இதுவரை பணம் கிடைக்காதவர்களுக்கான குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் முறை மேல்முறையீட்டு சமயத்திலும் பலரின் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. தற்போது நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.