பெருமாள் கோவில் அறங்காவலர் இஸ்லாமியர்? அவதூறு பரப்புகிறாரா எச்.ராஜா?

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எச்.ராஜா,

”பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை... இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார். அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்.

இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..? இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..? இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”என்று கூறியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்க்கும் பிரிவு நர்க்கீஸ்கான் பேசிய காணொலியை வெளியிட்டுள்ளனர். ”தன்னுடைய தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயர் நர்க்கீஸ்கான். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாயையும் சேயையும் பத்திரமாக பாதுகாத்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை தனக்குச் சூட்டியுள்ளனர். நான் இந்து தான், என்னுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அறநிலையத்துறையிடம் கொடுத்துள்ளேன். யாரும் அவதூறு பரப்பாதீர்கள்” என்று நர்க்கீஸ்கான் வீடியோவில் கூறியுள்ளார்