ஒரே வாரத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,880 அதிகரிப்பு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

 

உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகில் மதிப்புமிக்க உலோகங்களில் தங்கமும் ஒன்று. ஆபரணங்கள், சேமிப்பு என்று தங்கத்தை நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பல நேரங்களில் நாம் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் போது, தங்கமே காக்கும். எந்த நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்திற்கு எளிமையாக உள்ளூர் ரொக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்படி பல்வேறு வசதிகள் உள்ளதால், மக்கள் பலரும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றனர். தனி மனிதர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இதை உணர்ந்தே உள்ளன. இதன் காரணமாக உலகின் பல முக்கிய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,390 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளியின் விலையும் நேற்று கிராமிற்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரண்டு வங்கிகள் திவாலானதால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை 1,880 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.