பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவன் மின்சாரம் தாக்கி பலி.. மனைவி கண்முன்னே நிகழ்ந்த சோகம்!

 

சென்னையில் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை சீரியல் பல்புகளால் அலங்கரித்த கணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தவனம் தெருவில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால். சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 6) தனது மனைவியின் 25வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்க அகஸ்டின் பால், வீட்டிற்குள் சீரியல் பல்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால், மனைவி கண்முன்னே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் நகர் போலீசார், அகஸ்டின் பாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.