உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவர்.. துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. கடலூரில் சோகம்!

 

கடலூர் அருகே உடல் நலக்குறைவு காரணமாக கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ்ம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (48). இவர், அரசு பேருந்து கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரமாவள்ளி (40). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலுக்கான இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது. கணவன் இறந்து போனதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமாவள்ளி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.