கணவன் - மனைவி பரிதாப பலி.. சாலையை கடக்க முயன்ற போது நிகழ்ந்த சோகம்

 

செங்கம் அருகே சாலையை கடக்க முயன்ற கணவன் - மனைவி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (36). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு வாசலா (36) என்ற மனைவி உள்ளார். இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கார் அவர்கள் மீது மோதியது.

இதில், கணவன்- மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அளித்தும், போலீசார் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் செங்கம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.