தமிழ்நாட்டில் 18-ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை!!

 

தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை வெப்பம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம், வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று (மே 13) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர ‘மோச்சா’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 14) காலை 8.30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14.05.2023, 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.