சுடுக்காட்டில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி உடல் மீட்பு.. கரூர் அருகே பரபரப்பு!

 

கரூர் அருகே கல்லூரி மாணவியின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம். புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (55). இவரது மனைவி தாயாரம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் சுபா ஹரிணி (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்தாமல், உடலை எரியூட்டுவதற்கு சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிமேட்டில் வைத்து எரியூட்டி உள்ளனர்.

தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த மாணவியின் உடலை, தண்ணீர் ஊற்றி அணைத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை மறைத்து குடும்பத்தினர் எரியூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கல்லூரி மாணவி எதற்க்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.