வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து.. பெண் ஒருவர் பலி.. 25 பேர் காயம்

 

தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லைன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.