சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. அரக்கோணம் அருகே பரபரப்பு!

 

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து 52 பெட்டிகள் கொண்ட காலி சரக்கு ரயில் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவுக்கு நேற்று அதிகாலை புறப்பட்டு இந்த ரயில் காட்பாடி - அரக்கோணம் வழியாக சென்றது.

நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென கார்டு பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் பெட்டி சிறிது தூரம் பெரும் சத்தத்துடன் இழுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சரக்கு ரயில் லூப்லைனில் தடம் புரண்டது தெரியவந்தது. இதையடுத்து, தடம் புரண்ட சக்கரங்களை ஊழியர்கள் மதியம் 12.10 மணி அளவில் சரி செய்தனர்.

அதன் பிறகு சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. லூப்லைனில் இந்த ரயில் தடம் புரண்டதால் மெயின்லைனில் செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.