பிரபல தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பெருங்குடி பகுதியில்  தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த  தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். அப்போது வங்கியில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து உடலுக்கு ஒவ்வாத விஷ வாயு கசிந்ததாக தெரிகிறது.

இந்த விஷ வாயுவால் வங்கி ஊழியர்கள் 13 பேருக்கு மூச்சுத் திணறலும் அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக  ஊழியர்கள் 13 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.