வாணியம்பாடியில் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி... கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிந்த சோகம்!!

 

வாணியம்பாடியில் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஜின்னா பாலம் அருகே இலவச புடவைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். 

இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில், 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். மேலும் ,12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.