ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை.. திருப்பூரில் பயங்கரம்.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

 

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் திருச்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில் குமார் (47). இவர் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). பாஜக மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தலைவராக உள்ளார். இவரது தாயார் புஷ்பவதி. இவருடைய அக்காள் ரத்தினாம்பாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில், செந்தில் குமாருக்கும் அவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த வெங்கடேசனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசனை அவர் பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டு தோட்டத்தில் கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து வெங்கடேசன் மது குடித்துள்ளார். அப்போது செந்தில் குமார் அவர்களை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அரிவாளுடன் திரும்பி வந்து செந்தில் குமாரை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற மோகன்ராஜ், அவரது தாய் மற்றும் சித்திக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சி, மணப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி. க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.