ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலைவெறி தாக்குதல்.. ஒருவர் பலி.. ஆவடி அருகே பயங்கரம்

 

ஆவடி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், திருக்குறள் தெருவை சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான இவர், இன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் மாதவனின் மனைவி, மகள் மற்றும் மாமியாருக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபரை மாதவன் தடுக்க முயன்றபோது, அவரின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரமாக மர்ம நபர் தாக்கியுள்ளார். இதில் மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் பின்னர் அந்த மர்ம நபர் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்றார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், படுகாயம் அடைந்த சிறுமி உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேரில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதவனின் உடலை கைப்பற்றிய போலீசார், சொத்து பிரச்சினையா, முன்விரோதமா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் இந்த சம்பவம் நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.