அரியலூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி!

 

அரியலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மவராட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேகமாக வந்த கார் லாரியின் மீது மோதியுள்ளது.

இந்த கோரமான விபத்தினால் கார் முற்றிலும் சிதைந்து சேதமடைந்தது. இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்களை மீட்க முற்பட்டனர். இந்த நிலையில், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன் (24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.