திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி!

 

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி, அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். மின்சார வாரியத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த அவர், திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1967-ம் ஆண்டு முதல் முறையாக அப்போதைய ஆற்காடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட, முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையால் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுகவில் உள்ள அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நிழலாகவே இருந்து வந்துள்ளார். 10 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள அவர், ஒரு முறை கூட தோல்வியை சந்தித்தது இல்லை. 3 முறை தமிழ்நாட்டி அரசின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

உணவுத்துறை, மின்சாரம் மற்றும் சுகாதாரம், ஊரக தொழில்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக ஆற்காடு வீராசாமி வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார்.

அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதனிடையே மருத்துவமனையில் உள்ளது போலவே, கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கேர்டேக்கர்களும் வீட்டிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கலாநிதி வீராசாமி, மருத்துவர் என்பதால் அவரே அவரது தந்தையை கவனித்துக் கொள்கிறார்.

இந்நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.