பண்ணை வீட்டில் இளம் பெண்களுடன் உல்லாசம்.. அதிரடி ரெய்டில் சிக்கிய கட்சி பிரமுகர்!

 

காரைக்குடி அருகே பண்ணை வீட்டில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை நாகலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பாட்ஷா (51). காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு குன்றக்குடி கொரட்டி சாலையில் ஆடம்பர சொகுசு பண்ணை வீடு ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மர்ம செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பண்ணை வீட்டை கண்காணித்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு அந்த பண்ணை வீட்டின் கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே அதிரடியாக நுழைந்த போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். அப்போது ஒரு அறையில் அயல் நாட்டு மதுபானங்கள் மற்றும் கறி உணவுகளோடு தொழிலதிபர் பாட்ஷா இரு இளம் பெண்களுடன் உல்லாசத்தில் இருப்பது தெரியவந்தது.

பக்கத்து அறையில் காரைக்குடி கே.வி.எஸ். நகரை சேர்ந்த ஜெயஸ்ரீ (37) என்பவரும் இருந்துள்ளார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயஸ்ரீ இளம் பெண்களை முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வெளிநாடு வரை அனுப்பி வைக்கும் புரோக்கர் தொழில் செய்பவர் என்றும், போலீசார் அங்கு சோதனையிட வருவதற்கு முன்பு தேசியக்கட்சியின் காரைக்குடி பிரபலங்கள் அங்கு வந்து சென்றதாகவும் தெரிய வந்தது.

மேலும் ஜெயஸ்ரீயிடம் இருந்து கைப்பற்றிய 4 செல்போன்களில் காரைக்குடியின் முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்களின் எண்களை கண்டு அதிர்ச்சி அடைந்த போலிசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தேன்மொழி (24) என்பதும் மற்றொருவர் திருச்சி காட்டூரை சேர்ந்த ஷம்சத் பேகம் (28 ) என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இளம்பெண்கள் இருவரையும் பத்திரமாக மீட்ட போலீசார் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வறுமையில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த புரோக்கர் ஜெயஸ்ரீ மற்றும் தொழிலதிபர் பாட்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்போனில் சிக்கிய முக்கிய புள்ளிகள் காரைக்குடியை விட்டு தலைமறைவாகி உள்ள நிலையில் பண்ணை வீட்டில் நடந்தது என்ன..? நடந்து கொண்டிருப்பது என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.