பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி பெண் ஊழியர் துடிதுடித்து பலி... சென்னையில் துயரம்!!

 

சென்னையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வந்தவர் பிரியங்கா(22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன் (23) உடன் மோட்டர் பைக்கில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றோரு இருசக்கர வாகனம் உரசியதில் பின்னால் அமரந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிரியங்கா படுகாயம் அடைந்தார். இதில் பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் பதிவு எண் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.