கணினி படிப்பு படிக்க ரூ.43,000 பணம் அனுப்பிய தந்தை.. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. போலீசார் தீவிர விசாரணை!

 

கணினி படிப்பு படிக்க தந்தையிடம் பணம் பெற்ற இளைஞர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர், குரோம்பேட்டை லட்சுமி புரத்தில் 6 மாதங்களாக தங்கி, மறைமலை நகரில் உள்ள தனியார் வீட்டு மனை விற்பனை நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் தனது தந்தைக்கு போன் செய்த கார்த்திகேயன், கணிணி தொடர்பான படிப்பு படிக்க பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அவரது தந்தையும், ஜிபே மூலம், 43 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். தொடர்ந்து, மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, கார்த்திகேயன் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை, துரைப்பாக்கத்தில் தங்கியுள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்தார். அவர், அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.