ஊசி போட்ட 10வது நிமிடத்தில் முதியவர் பலி.. சித்த மருத்துவர் கைது.. சென்னையில் பரபரப்பு

 

பூந்தமல்லி அருகே முதியவருக்கு சித்த மருத்துவம் படித்த டாக்டர், ஆங்கில மருத்துவம் பார்த்து ஊசி போட்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜேந்திரன் என்ற முதியவர் இந்த மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமான ஊசி போட்டுள்ளார்.

இந்த நிலையில் ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், ஊசி போட்டதில் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சித்த மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மருத்துவமனையில் இருந்து ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகள் ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

உடல்நலக்குறைவுடன் சித்த மருத்துவமனைக்கு வந்த முதியவருக்கு சித்த மருத்துவம் படித்த டாக்டர், ஆங்கில மருத்துவம் பார்த்து ஊசி போட்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.