குடிபோதையில் அடித்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் சோகம்!!

 

சென்னையில் குடிபோதையில் கணவர் அடித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் 1-வது தெருவில் வசித்து வருபவர் ரகுபதி. இவர், சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (27). இவர்கள் இருவரும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக ரகுபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரகுபதி வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த ரகுபதி, தனது காதல் மனைவி பிரியங்காவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரியங்கா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிரியங்காவின் தந்தையான புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.