சீக்கரம் சமையல் செய்ய மாட்டியா..? மாமியார் திட்டியதால் விரக்தியில் மருமகள் எடுத்த விபரீத முடிவு..!

 

திருப்பத்தூர் அருகே சமையல் செய்வதில் தாமதபடுத்தியதாக கூறி மாமியர் சண்டையிட்டதால், விரகத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மற்றபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சூர்யா (27). கட்டட தொழிலாளியான இவர், கோயம்புத்தூர் மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் பணிபுரிந்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவடு கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதலில் எதிர்த்த ஆதிலட்சுமியின் பெற்றோர் பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும்  இரு சக்கர வாகனத்தை வரதட்சணையாக  கொடுத்துள்ளனர். திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அடிக்கடி  ஆதிலட்சுமியின் கணவர் குடும்பத்தினர் சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதில் தாமதபடுத்தியதாக கூறி சண்டையிட்டு உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி, துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவலின் பேரில் ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஆதிலட்சுமி இந்த முடிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

பெண்ணின் உறவினர்கள் சாவில் சந்தேகம்  இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வதாக  கூறியதன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆவதால், இந்த விசாரணை திருப்பத்துார் சப் -கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.