திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்... கார் கண்ணாடி உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு!!

 

மாநிலங்களவை  உறுப்பினர்  திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முக்கிய பிரமுகர்கள் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. தீவிர திராவிட இயக்க கொள்கைப் பற்று உள்ள திருச்சி சிவாவுக்கு கட்சியில் அங்கீகாரம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. இவர் பல முலமறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு திமுக முக்கிய தலைவர்கள் இடத்திலும் தொண்டர்கள் இடத்திலும் செல்வாக்கு உள்ளது.

இந்த நிலையில், திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை  உறுப்பினர்  திருச்சி சிவா வீடு  எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது.  அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை வருகை தந்தார்.   இதற்கான பெயர் பலகையில் எம்.பி  சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.

கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்  திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.