குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறு.. அமமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை!

 

வேலூர் அருகே குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் அமமுக நிர்வாகியின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்து உள்ள கொசவன்புதூரை சேர்ந்தவர் பிரதீப் (40). இவர், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளர். இவரது மனைவி லிஷா (33). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இது தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த லிஷா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், லிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லிஷாவின் தந்தை கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார். அதில், லிஷாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.