பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை..!

 

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.1.25 கோடியை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி, பண்டிகை நாட்களிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் நேர்த்திக்கடனாக காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். இதற்காக கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்த கோவிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன், சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பணியில் வங்கி அலுவலர்கள், பக்தர்கள், மாணவ - மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 877 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 568 கிராம் தங்கம், 1,230 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.