தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு.. நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் இந்த பிரச்சனை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்‌ஷன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, காதார துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பாக தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கால்நடைத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.