கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம் உள்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்.) பட்டப்படிப்பு உள்ளது.

அதேபோல், சென்னை கோடுவளியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியும், ஒசூர் மத்திரிகிரியில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் உணவு, பால்வளம், கோழியின (பிடெக்) தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன.

இதற்கான, 2024-2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 3-ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை, கால்நடை மருத்துவப்பட்டப்படிப்புக்கு 11 ஆயிரத்து 586 விண்ணப்பங்களும், பிடெக் பட்டப்படிப்புக்கு 2 ஆயிரத்து 392 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வருகிற 28-ம் தேதி மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.