மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ரூ.6,000 நிவாரண நிதி டோக்கன் இன்று முதல் விநியோகம்

 

மிக்ஜாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.

மிக்ஜாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் கடந்த 9-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வரும் 17-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.