பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கல்லூரி மாணவி.. ஓசூரில் அதிர்ச்சி!

 

ஓசூர் பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் கோபிகா (19). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை கவனித்த பெற்றோர் மகள் கோபிகாவை செல்போனில் பேசிக்கொண்டே இருக்காதே என்று கண்டித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவே இல்லை. இதனால் அவரது பெற்றோர், பதறிப்போய் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை அன்று ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் பின்புறமுள்ள பூங்காவில் மாணவி ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவி கோபிகா என்பது தெரியவந்ததை அடுத்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.