7வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு!!

 

கூடுவாஞ்சேரி அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆயுஷ் யாதவ் (23). டெல்லியை சேர்ந்த இவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தங்கியிருக்கும் சக கல்லூரி மாணவர்களுடன் ஆயுஷ் யாதவ் பேசிகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென 7-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆயுஷ் யாதவ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆயுஷ் யாதவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆயுஷ் யாதவ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கும் சக கல்லூரி மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.