விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. காதல் விவகாரத்தில் விபரீதம்!

 

கோவை அருகே தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி.ஐ.எஸ்.எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4-வது மாடிக்குச் சென்ற அவர் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பபிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், பபிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விடுதியில் இருந்த சக மாணவிகளிடம் விசாரித்த போது நேற்று காலை ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பபிஷா, பின்னர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றததும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.