11வது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் குதித்து தற்கொலை... காப்பியடித்து மாட்டிக் கொண்டதால் விபரீதம்!

 

சென்னையில் காப்பி அடித்தைக் கண்டித்தால் பொறியியல் மாணவர் 11வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன் கோகுல்ராம் (19). இவர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று, இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வு நடைபெற்றதால், கல்லுாரியின் 5வது மாடியில் தேர்வு நடத்தப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மாணவரை பார்த்து காப்பி அடித்தால் தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை கண்டித்துள்ளார். மேலும் தேர்வுத்தாளை வாங்கி கொண்டு வெளியே அனுப்பியதுடன், பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கோகுல்ராம், நேராக கல்லூரியின் 11வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பி அடித்தைக் கண்டித்தால் பொறியியல் மாணவர் 11வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.