கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை.. செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் விபரீதம்!

 

அந்தியூர் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கராசு. விவசாயியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகள் பிரதீபா (18). இவர், கவுந்தப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் இருக்கும்போது பிரதீபா அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட தாய் சித்ரா மகளை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பிரதீபா கடந்த மாதம் விஷம் குடித்துள்ளார்.

உடனே வீட்டில் இருந்தவர்கள் பிரதீபாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரதீபா பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீபா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.