9-ம் வகுப்பு மாணவன் பலி.. பைக் ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!

 

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற 9-ம் வகுப்பு மாணவன் பள்ளிப்பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் திவாகர் (14). இவர், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் திவாகர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்க சக்தி நகர் பகுதியில் உள்ள சந்தைக்கு செல்ல தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜய் என்பவருடன் புதுப்பேட்டை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தனியார் பேருந்து திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை சாலை வழியாக சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேர் எதிரே வந்த  திவாகர் மற்றும் அஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் திவாகர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அஜய் உயிர் தப்பினார். இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பள்ளி பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அங்கிருந்து பள்ளிக்குச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திவாகர் உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.