பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவி பலி.. புதுக்கோட்டையில் சோகம்

 

புதுக்கோட்டை அருகே பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை. இவரது மகள் விசித்ரா (14). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி விசித்ரா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார்.

அப்போது நல்ல பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட விசித்ரா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி விசித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெயில் காலங்களில், பாம்புகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கிராமப்புற மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.