ரிசல்ட்டை பார்க்கும் முன்னே 10-ம் வகுப்பு மாணவன் பலி.. மதுரவாயல் பாலத்தில் கோரம்

 

சென்னையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

அப்போது மதுரவாயல் பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது லாரி மோதியது. இந்த விபத்தில் மாணவன் ஜீவா சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தப்பித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.